வீட்டுக் காவலில் வைத்த போலீசார் - ஆரத்தி எடுத்து எதிர்ப்பு தெரிவித்த ஆந்திர முதல்வரின் சகோதரி!
வீட்டுக் காவலில் வைத்த போலீசாருக்கு ஆரத்தி எடுத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ஒய்.எஸ். ஷர்மிளா.
மக்கள் போராட்டம்
ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா, ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சி நடத்தி வருகிறார்.
தெலுங்கானா மாநில அரசு 'தலித்பந்து' என்ற திட்டத்தின் கீழ் பட்டியிலனத்தை சேர்ந்த குடும்பத்தினருக்கு முதலீட்டு தொகையாக ரூ.10 லட்சத்தை முழு மானியமாக வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாகவும், தகுதி உள்ளவர்களுக்கு கிடைக்கவில்லை என்றும் சித்திபேட் மாவட்டம் கஜ்வேல் கிராமத்தை சேர்ந்த மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்திய வருகின்றனர்.
ஆரத்தி எடுத்து எதிர்ப்பு
இந்த போராட்டக்காரர்களுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவிக்க ஓய்.எஸ். ஷர்மிளா ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து நேற்று கிளம்பினார். அப்போது கிராமத்துக்கு செல்ல அனுமதி பெறவில்லை என்று ஷர்மிளாவை போலீசார் வீட்டிலிருந்து வெளியில் செல்லாமல் தடுத்து நிறுத்தி வீட்டுக் காவலில் வைத்தனர்.
அவரது வீட்டை சுற்றிலும் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டனர். இதனால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஷர்மிளா ஒருகட்டத்தில் தன்னை வெளியே செல்லவிடாமல் தடுத்து நின்ற போலீசாருக்கு கற்பூர அராத்தி எடுத்து எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் இனைந்து தனது வீட்டின் முன்பு மாநில அரசுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கினார் ஓய்.எஸ். ஷர்மிளா.