யூடியூபர் மாரிதாஸ்-க்கு டிச.30 வரை நீதிமன்றக் காவல்
கொரோனா பரவலை முன்வைத்து மதமோதலை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட வழக்கில் யூடியூபர் மாரிதாஸ் மீண்டும் நெல்லை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தை முன்வைத்து மாரிதாஸ் சமூக வலைதளங்களில் சில கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். தமிழக அரசை விமர்சித்த இந்த பதிவுக்காக மாரிதாஸ் முதலில் கைது செய்யப்பட்டார்.
மாரிதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன் வீடியோ ஒன்றில் வன்முறையை தூண்டியதற்காகவும் மதுரை நகரக் காவல்துறை மாரிதாஸை கைது செய்தது இந்நிலையில், மாரிதாஸ் தன்னை விடுவித்து இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென்று உயர் நீதிமன்ற மதுரைகிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் காவல் துறையினர் உரிய முறையில் ஆவணமாக பதிவு செய்யாமல், வீடியோவை மட்டும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர் என்று கூறி வழக்கை ரத்து செய்தார் இந்நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த யூடியூபர் மாரிதாஸை மீண்டும் போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த 04.04.2020ல் காதர் மீரான் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மேலப்பாளையம் காவல் நிலையத்தில் 292A, 295 A, 505 ( 2), It act 67 என 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக இன்று மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் இன்று நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் யூடியூபர் மாரிதாஸ்-க்கு டிச.30 வரை நீதிமன்றக் காவல் விதித்து நெல்லை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.