யூடியூப் சேனல்கள் முடக்கப்படும்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் எச்சரிக்கை
இந்தியாவிற்கு எதிராக சதி செய்யும் இணையதளம், யூடியூப் சேனல்கள் முடக்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த, போலி செய்திகளை பரப்பியதற்காக 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இரண்டு இணையதளங்கள் கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி முடக்கப்பட்டன. இந்தத் தளங்கள் பாகிஸ்தானில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்டு செயல்பட்டு வருவதாகவும், நாட்டின் முக்கிய விவகாரங்களான காஷ்மீர், விவசாயிகள் போராட்டம் மற்றும் ராமர் கோவில் போன்றது தொடர்பாக தவறான தகவல்களை இவை பரப்பி வருவதாகவும் புகார் எழுந்ததால் மத்திய அரசு அனைத்தையும் முடக்கி நடவடிக்கை எடுத்தது.

இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில் காஷ்மீர், இந்திய ராணுவம், சிறுபான்மை சமூகங்கள் போன்ற தலைப்புகளில் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் பிளவுபடுத்தும் நோக்கத்தோடு செய்திகள் வெளியிட்ட தி பஞ்ச் லைன், இன்டர்நேஷனல் வெப் நியூஸ், கல்சா டிவி மற்றும் தி நேக்கட் ட்ரூத், 48 செய்திகள், பிக்சன்ஸ், ஹிஸ்டாரிக்கல் ஃபேக்ட்ஸ், பஞ்சாப் வைரல், நயா பாகிஸ்தான் குளோபல், கவர் ஸ்டோரி, கோ குளோபல் போன்ற சேனல்கள் முடக்கப்பட்டதாக தெரிவித்தது.
இதுகுறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நாட்டின் நலனுக்கு எதிராகச் செயல்படும் யூடியூப் தளங்கள் மற்றும் இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்காலத்திலும், இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவது, பொய்களைப் பரப்புவது மற்றும் சமூகத்தைப் பிளவுபடுத்துவது போன்ற எந்தவொரு கணக்கையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். யூடியூப் நிறுவனமே முன்வந்து இதுபோன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது என தெரிவித்தார்.