கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு; ஊடகங்கள், யூடியூப் சேனல்கள் புலன்விசாரணை செய்தால் வழக்குப்பதிவு - சிபிசிஐடி

Kallakurichi School Death Kallakurichi
By Thahir Aug 06, 2022 03:03 AM GMT
Report

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக ஊடகங்கள், யூடியூப் சேனல்கள் புலன்விசாரணை செய்தால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிசிஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

புலன் விசாரணை செய்தால் நடவடிக்கை 

இது தொடர்பாக சிபிசிஐடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் 17 வயது பள்ளி மாணவி இறந்தது தொடர்பான வழக்கு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டு புலன்விசாரணையில் உள்ளது.

Kallakurichi

விழுப்புரம் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையினர் மேற்படி வழக்கில் புலன்விசாரணை மேற்கொண்டு, மேற்படி இறப்பு சம்பந்தமாக அனைத்து கோணங்களிலும் புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

இவ்வழக்கில் நியாயமான மற்றும் விரிவான புலன்விசாரணை நடைபெற்று வருகின்றது. இவ்வழக்கின் புலன்விசாரணையை மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் கண்காணித்து வருகின்றது.

சமூக ஊடகங்கள், பத்திரிக்கை மற்றும் காட்சி ஊடகங்கள் இது சம்பந்தமாக அவர்களது சொந்தக் கருத்துக்களையும், அறிக்கைகளையும் காணொளி காட்சிகள் வாயிலாக வெளியிட்டும், மேலும் இது சம்பந்தமாக இணையான புலன்விசாரணை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையின் புலன்விசாரணையை பாதிக்கும் வகையில் அமைகின்றது. இத்தகைய சூழ்நிலையில், புலன்விசாரணையின் முன்னேற்றத்தை பாதிக்கும் வகையில் எந்தவிதமான பதிவு மற்றும் காணொளி காட்சிகளை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாமென்று அனைவரும் வேண்டி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

மேலும், இது தொடர்பாக நீதியை நிலைநாட்டுவதற்கும், நியாயமான புலன்விசாரணை மேற்கொள்ளவும் அனைவரும் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்கும்படி வேண்டிக் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

ஏதேனும் தனிநபரோ அல்லது நிறுவனமோ இவ்வாறான இணையான புலன்விசாரணையில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்களுடைய வலைதள கணக்குகள் மற்றும் யூடியூப் சேனல்களை முடக்க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வழக்கு தொடர்பாக யாருக்கேனும் உரிய தகவல் கிடைத்தால் அதனை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையின் உயர் அதிகாரியின் அலைப்பேசி எண்.9003848126 க்கு நேரடியாக பகிரும்படி வேண்டிக்கொள்ளப்படுகிறீர்கள், இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.