இது நான்வெஜ் பிரியாணி - பில் கட்டாமல் எஸ்கேப் ஆக நாடகமாடிய இளைஞர்கள்!
உணவுக்கான பில்லைத் தவிர்க்க இளைஞர்கள் நாடகமாடிய சம்பவம் அம்பலமாகியுள்ளது.
நாடகமாடிய இளைஞர்கள்
உத்தரப் பிரதேசம், கோரக்பூரில் எட்டு முதல் பத்து பேர் கொண்ட ஒரு குழு உணவகத்திற்குச் சென்று வெஜ் பிரியாணி மற்றும் அசைவ பிரியாணியை ஆர்டர் செய்துள்ளனர்.
தொடர்ந்து அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அவர்களில் ஒருவர் தனது வெஜ் பிரியாணியில் எலும்பு இருப்பதாக சத்தமிட்டுள்ளார். உடனே உணவக உரிமையாளர் ரவிகர் சிங், தனது சமையலறையில் அசை உணவுகள் தனித்தனியாக சமைக்கப்படுவதால் இப்படி ஏற்பட்டிருக்க வாய்ப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
சிசிடிவியால் அம்பலம்
ஆனால், இதனை மறுத்த அந்த இளைஞர்கள் சத்தமிட்டு கொண்டே இருந்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், வேண்டுமென்றே இளைஞர்கள் நாடகமாடியது தெரியவந்துள்ளது.
பின் இதுகுறித்து போலீஸாரிடம், உணவக உரிமையாளர் கூறுகையில், "அவர்கள் ₹ 5,000-6,000 வரையிலான பில் தொகையை செலுத்துவதைத் தவிர்க்க விரும்பினர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
அவர்களின் செயல்கள் முற்றிலும் வேண்டுமென்றே செய்யப்பட்டவை" என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.