மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: லாரி ஏற்றி கொல்ல முயன்ற கொடூர கணவன்

salem youthmurder
By Petchi Avudaiappan Aug 16, 2021 05:31 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

 சேலம் அருகே குடும்பத் தகராறில் இளைஞர் மீது லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் சோளம்பள்ளம் அருகே உள்ள காந்திநகர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவரான சரவணனுக்கு, அதே பகுதியை சேர்ந்த ஜீவிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

அதன்பின் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட கணவனை விட்டு பிரிந்து ஜீவிதா தனது தாய் வீட்டிற்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு சென்றுவிட்டார். தொடர்ந்து பல முறை அழைத்தும் அவர் சரவணனுடன் சேர்ந்து வாழ மறுப்புத் தெரிவித்தாக கூறப்படுகின்றது.

இதனிடையே நேற்று தனது மாமனார் வீட்டிற்கு சென்ற மதுபோதையில் சென்ற சரவணன் மனைவி ஜீவிதாவிடம் குடும்பம் நடத்த வரச் சொல்லி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஜீவிதாவின் தந்தை குப்பன் சரவணனை கண்டித்து பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மாமனார் மீது தனது லாரியை ஏற்றிக் கொல்ல முயன்றுள்ளார்.

அப்போது குப்பனைக் காப்பாற்ற சென்ற ஜீவிதாவின் அத்தை மகன் ஜீவானந்தம் மீது லாரி மோதியது. இதில் படுகாயமடைந்த ஜீவானந்தம் மருத்துவமனைக்கு செல்லும் போது வழியிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே சரவணனை மடக்கிப் பிடித்த உறவினர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சூரமங்கலம் காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.