புத்தாண்டு போதை பார்ட்டியில் புகுந்த போலீஸ் - தப்பிக்க நினைத்து 8வது மாடியில் இருந்து குதித்த நபர்.
புத்தாண்டு போதை விருந்தில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தியதால் அதில் பங்கேற்ற நபர் தப்பிக்க 8வது மாடியில் இருந்து குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் நேற்று புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அந்த வகையில் இந்தியாவின் கேரள மாநிலத்திலும் புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால் தடையை மீறி அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் அரங்கேறியது. இதில் ஒரு சில இடங்களில் போதை விருந்தும் நடைபெற்றுள்ளது.இதனிடையே டிசம்பர் 31 இரவு கொச்சியில் உள்ள எர்ணாகுளம் மாவட்டம் தீர்க்கக்கரா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சட்டவிரோதமாக போதை பார்ட்டியுடன் புத்தாண்டு கொண்ட்டங்கள் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் அதிரடியாக ரெய்டு நடத்தினர். அப்போது, அடுக்குமாடி குடியிருப்பின் 8வது மாடியில் போதை விருந்துடன் புத்தாண்டு பார்ட்டி நடைபெறுவதை போலீசார் கண்டுபிடித்தனர்.போதை பார்ட்டி நடைபெற்ற 8வது மாடியில் உள்ள ஒரு வீட்டிற்குள் போலீசார் அதிரடியாக நுழைந்தனர். அப்போது அந்த வீட்டில் பெண் உள்பட 6 பேர் போதை விருந்தில் பங்கேற்றது தெரியவந்தது. அவர்களை கைது செய்ய போலீசார் முற்பட்டனர்.
விருந்தில் பங்கேற்றிருந்த அதுல் என்ற 22 வயது இளைஞர் போலீசார் வீட்டிற்குள் நுழைந்ததை பார்த்த உடன் அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என எண்ணி 8வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனால் கார்பார்க்கிங் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகர மேடையில் விழுந்து அங்கிருந்து தரையில் விழுந்துள்ளார்.
படுகாயங்களுடன் கீழே கிடந்த அதுலை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதுலுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நிஜாம் ஷாம்சுதேசன், அனிஷ் அனி, ஷினோ மெர்வின், மரியா பிஜூ மற்றும் ராஜூ ஆகிய 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.