ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்த இளைஞர் தற்கொலை - தொடரும் சோகம்
சென்னை அருகே ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சம் பணத்தை இழந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.20 லட்சம் பணத்தை இழந்த இளைஞர்
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து உயிரிழப்போர் எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது.
இதை தொடர்ந்து தமிழக அரசு சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை விதித்து சட்டமியற்ற ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்துள்ளார்.
இந்த நிலையில் சென்னை மாடவாக்கம் கணபதி காலணி பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் இவர் மருத்துவ நிறுவன பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்றுள்ளார்.
அந்த பணத்தை ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை விளையாடியாதாக கூறப்படுகிறது. ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.
துாக்கிட்டு தற்கொலை
இதனால் பல இன்னல்களை சந்தித்து வந்த வினோத் குமார் நேற்று இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்து சென்ற போலீசார் வினோத் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ளும் முன் வினோத் குமார் எழுதிய கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகினறனர்.