குடி பழக்கத்தை நிறுத்த சொன்னதால் 14 வயது மாணவன் எடுத்த விபரீத முடிவு!
சிவகாசியில் மது அருந்துவதை உறவினர்கள் கண்டித்ததால் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஜயலட்சுமி காலனியை சேர்ந்தவர் 36 வயதான செந்தில்பாண்டி. இவரது அக்கா மகன் 14 வயதான ஹரி கிருஷ்ணன். இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
தந்தை கேரளாவில் பணிபுரியும் நிலையில், தாய் மற்றும் மாமாவுடன் சிவகாசியில் வசித்து வந்தான். இந்த நிலையில், ஹரிகிருஷ்ணன் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
இதனை குடும்பத்தினர் கண்டித்தும் கைவிட வில்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பணத்தை திருடி ஹரிகிருஷ்ணன் மது அருந்தி உள்ளான்.
இதனால் அவரை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்து காணப்பட்ட ஹரிகிருஷ்ணன் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார், ஹரிகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து செந்தில்பாண்டி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மது அருந்தியதை குடும்பத்தினர் கண்டித்ததால் பள்ளி மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.