கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் : ஒருதலை காதலா?
குமாரபாளையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய நபரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள விட்டலபுரியில் ஜவுளி தொழில் செய்து வருபவர் ராஜா. இவரது ஜவுளி நிறுவனத்தில் பெரியார் நகரை சேர்ந்த பிரதீப் கூலி வேலை செய்து வருகிறார்.
ஒரு தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வரும் பிரதீப், தனது உரிமையாளரின் வீட்டிற்குச் சென்று ராஜாவின் மகள் கோகில வாணியிடம் ஒரு காகிதத்தை கொடுப்பது போல் நடித்து அந்த காகிதத்தை கீழே தவறவிட்டுள்ளார். அப்போது அந்த காகிதத்தை எடுக்க கோகிலவாணி கீழே குனிந்தபோது அவரது கழுத்து, வயிறு, கன்னம், கால் உள்ளிட்ட பகுதிகளில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
கோகிலவாணியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர்,வெளியே ஓடிவந்த பிரதீப்பை துரத்திச் பிடித்து குமாரபாளையம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். கோகிலவாணி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கோகிலவாணி கோவை தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.காம், படித்து வருகிறார். போலீசார் விசாரணையில் உள்ள பிரதீப்பிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒருதலை காதல் காரணமாக பிரதீப் கோகிலாவை கத்தியால் குத்தினாரா? அல்லது கோகிலவாணி அணிந்திருந்த நகையை பறிப்பதற்காக கத்தியால் குத்தினாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.