ஒருதலை காதலில் இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு இளைஞர் தற்கொலை
பெரம்பலூர் அருகே ஒருதலைக் காதல் விவகாரத்தில் இளம்பெண் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே கொளப்பாடி கிராமத்தில் அருள்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கோழி பண்ணை வைத்து தொழில் செய்துவரும் அவர், அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகள் தனலட்சுமி என்ற இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனலட்சுமி அவரது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்ததைப் பார்த்து ஆத்திரமடைந்த அருள்பாண்டியன் பின்தொடர்ந்து சென்று மறைத்து வைத்திருந்த கத்தியால் தனலட்சுமியின் முதுகில் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த தனலட்சுமி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையே இளம் பெண்ணை கொலை செய்த அருள்பாண்டியன், அவரது வயலுக்குச் சென்று அங்கிருந்த மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகலறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருள்பாண்டியன் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.