ரோலர் கோஸ்டரில் இருந்து கீழே விழுந்த பெண் - வருங்கால கணவர் கண்முன் நேர்ந்த சோகம்
ரோலர் கோஸ்டரில் இருந்து கீழே விழுந்த பெண் உயிரிழந்துள்ளார்.
டெல்லியை சேர்ந்த 24 வயதான பிரியங்கா, நொய்டாவில் உள்ள ஒரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இவருக்கு டெல்லியை சேர்ந்த நிகில் என்பவருடன் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் பிப்ரவரி 2026 இல் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
வியாழக்கிழமை தனது வருங்கால கணவருடன் தென்மேற்கு டெல்லியில் உள்ள கபசேரா பார்டர் அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவுக்கு சென்றார்.
இளம் பெண் உயிரிழப்பு
அங்கு தண்ணீர் விளையாட்டுகளில் விளையாடிய பின்னர், மாலை 6:15 மணியளவில் ரோலர் கோஸ்டரில் இருவரும் பயணித்தனர். ரோலர் கோஸ்டர் உயரத்தில் பறந்தபோது பிரியங்கா அமர்ந்திருந்த இருக்கையின் ஸ்டேண்ட் திடீரென்று உடைந்தது.
இதனால் பிரியங்கா ரோலர் கோஸ்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர், உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்குப் பின்னர் பிரியங்காவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து நிகில் அளித்த தகவலின் அடிப்படையில், பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து ஏற்பட்ட பகுதி தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.