நேற்று டீ கடைக்காரர் மகள்... இன்று DSP - இணையத்தில் குவியும் பாராட்டு..!
முதல் முயற்சியிலே டீ கடைக்காரர் மகள் ஒருவர் காவல்துறை கண்காணிப்பாளர் பணிக்கு தேர்வாகியுள்ளார்.
இரவு - பகல் பாராமல் படித்த மாணவி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள செட்டியாப்பட்டி கிராமத்தில் வீரமுத்து- என்பவர் வசித்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த வீரமுத்து அப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி வீரம்மாள். இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் இதில் 3வது மகள்தான் பவானியா. இவர் தனது குடும்பத்தின் வறுமை சூழலை கருத்தில் கொண்டு விவசாய கூலி வேலைக்கு சென்றபடியே படித்து வந்தார்.
மூத்த சகோதரிகளுக்கு திருமணம் முடிந்தவிட்டதால், தன் நிலையையும், தன் குடும்பத்தின் நிலையையும் கல்வி ஒன்றுமட்டும்தான் உயர்த்தும் என்பதை உணர்ந்து இரவு, பகல் பாராமல் கடுமையாக படித்தார்.
அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரையில் படித்த பவானியா புதுக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் தமிழ் வழியில் கணிதம் படித்து முடித்தார்.
நேற்று டீ கடைக்காரர் பெண்ணு...இன்று DSP
வீட்டின் சூழலை அடுத்து அவர் வீட்டில் இருந்தே தனது படிப்பை தொடரந்துள்ளார். முதலில் குரூப்1 முதல் தேர்வில் தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள மனிதநேயம் இலவச பயிற்சி மையத்தில் சேர்ந்து பவானியா படித்து வந்தார்.
இடையில் கொரோனா தொற்று காரணமாக மையத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக தனது படிப்பை தொடர்ந்தார்.
தற்போது குரூப்1 தேர்வை எழுதிய பவானியா தனது முதலாவது முயற்சியிலேயே முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்று டிஎஸ்பியாக பதவியேற்க இருக்கிறார்.
இருப்பினும் இந்த வெற்றி மட்டுமே எனது இலக்கு கிடையாது மேற்கொண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆக வேண்டும். அதற்காக நான் தீவிரமாக படித்து வருகிறேன் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
குடும்ப வறுமை சூழ்நிலையிலும், அயராது படித்து தற்போது டிஎஸ்பியாக பதவியேற்க உள்ள பவானியாவை பார்த்து சாதிக்க துடிக்கும் பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டும். பவானியாவுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.