கேரளாவில் இளைஞர் ஒருவருக்கு புதிய வகை எக்ஸ்.இ கொரோனா தொற்று
உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகள் பெரும் அச்சுறுத்தலாக நீடித்து வரும் நிலையில் ஒமைக்ரான் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மரபணு மாற்றம் அடைந்து வருகிறது. தற்போது பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் எக்ஸ். இ. என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது.
குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒருவருக்கு இந்த வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் சமீப காலத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்ததால், கட்டுப்பாடுகளை மத்திய அரசும், மாநில அரசும் தளர்வுகளை அறிவித்திருந்தது.
மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், திரும்பவும் இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஒமைக்ரானின் புதிய வகையான துணை திரிபான எக்ஸ்.இ. வகைத் தொற்று மூலம் 4-ம் அலை பரவி வருவதாக உலக நாடுகள் தகவல் வெளியிட்டுள்ளன.
கொரோனா எக்ஸ்.இ வகை தொற்று தற்போது சீனாவில் பரவி வருவதாகவும் அதன் பரவலை கட்டுப்படுத்த அங்கு மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
இந்தியாவிலும் இந்நோய் தாக்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் முதன்முதலாக கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரது ரத்த மாதிரிகளை சேகரித்து ராஜீவ்காந்தி பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதில் அந்த வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இந்த தொற்று கொரோனா எக்ஸ்.இ வகையை சேர்ந்ததாக இருக்கலாம் என கேரள சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை சுகாதாரத்துறையின் உயர் அதிகாரி ஒருவரும் உறுதி செய்தார்.
இதனை தொடர்ந்து அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிகை நடவடிக்கைகளை துரித படுத்தி வருகின்றனர்.