ஊரோடு சேர்ந்து தன்னைத்தானே தேடிய ஆசாமி! சுவாரஸ்ய சம்பவம்
துருக்கியை சேர்ந்த நபர் ஒருவர், மது குடித்து விட்டு தன்னை தானே நண்பர்களுடன் இணைந்து தேடிய சம்பவம் நடந்துள்ளது.
துருக்கியை சேர்ந்த பாய்ஹன் முட்லு (50). இவர் தனது நண்பர்களுடன் இணைந்து மது அருந்தி உள்ளார். பின் அங்கிருந்து கலைந்து, அனைவரும் வீடு திரும்பி விட்டனர். பாய்ஹன் முட்லு மட்டும் வீட்டுக்கு நேரடியாக செல்லாமல், அங்கிருந்த பகுதியில் தனியாக உலவிக் கொண்டிருந்தார்.
அவர் வீட்டு வராததால், குடும்பத்தினர் அவரைப் பற்றி நண்பர்களிடம் விசாரித்தனர். ஊர் முழுவதும் தங்கள் நண்பனொருவனை காணவில்லை என அக்குழு தெரிவித்தது. மக்கள் அனைவரும் இணைந்து தேடுதல் பணிக்கு உதவ முன்வந்தார்கள்.
அப்போது அங்கு உலவிக்கொண்டிருந்த பாய்ஹன் முட்லுவும் வந்தார். தன்னைதான் குறிப்பிடுகின்றனர் என்றே தெரியாமல், ‘யாரையோ தேடுகிறார்கள்... நாமும் உதவுவோம்’ என்று அவரும் மக்களோடு இணைந்தார். இது தெரியாத அப்பகுதி மக்கள், அவருடனே இணைந்து அவரை பல மணி நேரம் தேடியுள்ளனர். ஒரு கிராமமே தேடுதலில் ஈடுபட்டிருந்தது.
ஒரு கட்டத்தில் சோர்வடைந்த அனைவரும், அவரின் பெயரை சொல்லி கத்தினார்கள். சத்தம் கேட்டு அவர் வந்துவிடுவார் என நினைத்து கிராமமே கத்தியபோதுதான், அங்கிருந்த பாய்ஹன் முட்லுவுக்கு விழிப்பே வந்தது. எல்லோரும் தன் பெயரை முழக்கமிடுவதை கண்ட அவர், அப்பாவியாக வந்து “நாமெல்லாம் யாரைத் தேடுகிறோம்? என்று கேட்டிருக்கிறார். நான் இங்கேதான் இருக்கிறேன்” எனக் கூட்டத்துக்குள்ளிருந்து குரல் கொடுத்துள்ளார்.
இதைக் கண்ட மக்கள் அனைவரும், சில நிமிடங்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் நடந்ததை புரிந்துக்கொண்டு சிரித்தபடி அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
