தேவையற்ற போர்களில் இனி அமெரிக்கா ஈடுபடாது- அதிபர் ஜோ பைடன் திட்டவட்டம்
எந்த நாட்டுடனும் பனிப்போரை விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் அவையின் 76-வது பொது அவை கூட்டம் நடந்து வருகின்றது. இந்த கூட்டத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்றார்.
அந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியதாவது -
தேவையற்ற போர்களில் இனி அமெரிக்கா ஈடுபடாது. உலகத்தின் முன்பு தற்போதுள்ள சவால்களுக்கு போர்கள் மூலம் தீர்வு காண முடியாது.
தன்னையும் தனது கூட்டாளிகளையும் காப்பாற்ற வேண்டிய தேவையிருந்தால் போரை கடைசி ஆயுதமாகத்தான் அமெரிக்கா பயன்படுத்தும். எந்த நாட்டுடனும் பனிப்போரை விரும்பவில்லை. அமைதிக்காக எந்த நாட்டுடன் இணைந்து செயல்படவும் தயார்.
கொரோனா போன்ற பெருந்தொற்றை வெடிகுண்டுகள் மூலம் தடுக்க முடியாது. அரசியல் மற்றும் அறிவியல் சார்ந்த கூட்டு முயற்சியே தேவை. பருவநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ள வளரும் நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் நிதி அதிகரிக்கப்படும்,
இவ்வாறு அவர் பேசினார்.
