ஆப்கனில் தொடரும் கொடூரம் : அடுத்தடுத்த குண்டுவெடிப்புகளில் 3 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் நடந்த அடுத்தடுத்து குண்டுவெடிப்புகளில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
இதனால் மொத்த அதிகாரமும் தலிபான்களிடம் சென்றுள்ளது. ஆப்கனில் போதிய உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் 5 வயதுக்கு உட்பட்ட 1 கோடி குழந்தைகள் தவித்து வருகிறார்கள். இந்த தகவலை யுனிசெப் அமைப்பு வெளியிட்டது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பி.டி.13 பகுதியில் திடீரென சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று நேற்று வெடித்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் காயமடைந்திருக்கிறார்கள். இதேபோன்று நங்கர்ஹார் மாகாணத்தின் ஜலாலாபாத் நகரில் தலிபான்களை இலக்காக கொண்டு அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நடைபெற்றுள்ளன.
இந்த வெடிகுண்டு தாக்குதல்களில் 3 பேர் பலியாகி இருக்கிறார்கள். 21 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள். காயமடைந்தவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்.
மொத்த உயிரிழப்புகளில் 3 பேர் பொதுமக்கள் ஆவர். மற்றவர்கள் தலிபான் போராளிகள் என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். அந்நாட்டில் தலிபான்கள் பொறுப்பேற்ற பின்பு நங்கர்ஹார் மாகாணத்தில் நடந்த முதல் குண்டுவெடிப்பு இதுவே ஆகும். இதற்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
