ஆப்கானில் மாணவிகள், ஆசிரியைகள் பள்ளிக்கு வர தடை வித்த தலிபான்கள் - தொடரும் அட்டூழியம்!
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். இதனையடுத்து, அமெரிக்கப் படைகள் வெளியேறியது. இதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானை முழுமையாக தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.
தலிபான்களின் இடைக்கால அரசை ஏற்க விரும்பாத உள்ளூர் மக்கள் முதல் வெளிநாட்டவர் வரை, படிப்படியாக அண்டை நாடுகளுக்கும், சொந்த நாடுகளுக்கும் இடம்பெயர்ந்து வருகிறார்கள்.
இதனிடையே, யாரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என தலிபான்கள் கேட்டுக் கொண்டார்கள். மேலும், 1996 – 2001ம் ஆண்டு வரை இருந்த அரசைப் போல தற்போதைய தலிபான் அரசு இருக்காது என்றும், பெண்களுக்குக் கல்வி உரிமை, வேலைக்குச் செல்லும் உரிமை வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்கள்.
ஆனால், ஆட்சிக்கு வந்ததும் பள்ளிகளில் ஆண்கள், பெண்கள் பார்க்க முடியாதவாறு திரையிட்டனர். இதைத் தொடர்ந்து, பெண்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தடை விதித்தார்கள். ஆப்கானிஸ்தானில் படிப்படியாக பெண்களுக்கான உரிமையை மறுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், தற்போதைய உத்தரவும் உலக நாடுகளிடையே அதிருப்தி அடைய வைத்துள்ளது. ஆப்கனின் எமிரேட் அரசில் அனைத்து தனியார், அரசுப் பள்ளிகள், மதரீதியான பள்ளிகளை இன்று முதல் திறக்கலாம் என்றும், ஆனால், மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். இதனால், பெண்களுக்கான கல்வி உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது.
தலிபான்கள் விடுத்துள்ள இந்த அறிவிப்பால், ஆசிரியைகள், மாணவிகளின் எதிர்காலம் குறித்து சர்வதேச கல்வியாளர்களும், குழந்தைகள் நல ஆர்வலர்களும் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.
