துப்பாக்கி முனையில் கினியா அதிபர் கைது - ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது - வெடிக்கும் பதற்றம்
மேற்கு ஆப்பிரிக்க நாடு கினியா. கடந்த 1958ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிடமிருந்து கினியா விடுதலை பெற்றது. அந்நாட்டில் 2010ம் ஆண்டு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றது. அந்த நடைபெற்ற முதல் தேர்தலில் ஆல்பா காண்டே (83) என்பவர் வெற்றி பெற்று அதிபரானார்.
இதனை தொடர்ந்து அதிபராக இருந்த அவர், 3-வது முறையாக கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றிவாகை சூடினார். ஆனால், அவருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இவரது ஆட்சி காலத்தில், அலுமினிய தாது பொருட்கள் ஏற்றுமதியால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தலைநகர் கோனாக்ரியில் துப்பாக்கி முனையில் அதிபர் ஆல்பா காண்டே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அரசுத் தொலைக்காட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ராணுவ கர்னல் மமாடி டம்போயா, அதிபர் ஆல்பா காண்டே தலைமையிலான அரசு கலைக்கப்பட்டதாக அறிவித்துள்ளார். அதிபர் ஆல்பா காண்டே சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
