யார் அரசு அமைப்பது? தலிபான்களிடையே கடும் மோதல் - பாக். உளவுத்துறை தலைவர் பேச்சுவார்த்தை
ஆப்கானிஸ்தானில் அரசு அமைப்பது தொடர்பாக தலிபான் அமைப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதலில் அதன் மூத்த தலைவரான முல்லா அப்துல் கானி பரதர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், தலிபான் அமைப்பினர், அரசு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த வெள்ளியன்று இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அரசு அமைக்கும் விவகாரத்தில் தலிபான்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
தலிபான்களுக்கும், அதனுடைய தொடர்புடைய ஹக்கானி குழுவினருக்கும் இடையே காபூலில் மோதல் நடைபெற்றதாகவும் அப்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த மோதலின்போது, தலிபான் அமைப்பின் இணை நிறுவனரான முல்லா அப்துல் கானி பரதர் காயமடைந்தாக கூறப்பட்டுள்ளது.
தலிபான்களிடையே ஏற்பட்டுள்ள மோதலுக்கு தீர்வு காணும்வகையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் தலைவர் ஃபயாஸ் ஹமீத் காபூல் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இதனையடுத்து, பஞ்ச்ஷீர் மாகாணத்தை கைப்பற்ற தலிபான்கள் நடத்திய தாக்குதலில் எதிர்ப்பு படையை சேர்ந்த செய்தித்தொடர்பாளர் ஃபஹிம் தஷ்தி கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தியை வெளியிட்டிருக்கின்றன.
