கசிந்தது ரகசிய திட்டம்! அதிர்ச்சியில் இங்கிலாந்து ராணியின் அரசக்குடும்பம்!
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்துக்கு தற்போது 95 வயதாகிறது. இதனையடுத்து, அவர் இறந்த பிறகு நடக்கும் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கான திட்டங்கள் குறித்த விவரங்கள் தயாரிக்கப்பட்டு ஆவணங்களாக வைக்கப்பட்டிருந்தது.
இந்த ஆவணங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கசிந்து இருப்பது அரசக் குடும்பத்தினரிடையேயும், மக்களுக்குமிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ‘ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ்’ என்ற குறியீட்டு பெயரில் இங்கிலாந்து ராணி இறந்த பிறகு என்ன நடக்கும்? என்ற விவரங்கள் அமெரிக்க செய்தி நிறுவனமான பொலி டிக்கோவுக்கு கசிந்துள்ளது.
அந்த திட்டத்தில், ராணி இறக்கும் நாளை அதிகாரிகள் ‘டி டே’ என்று குறிப்பிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராணி இறந்த 10 நாட்களுக்கு பிறகு அடக்கம் செய்யப்படுவார் என்றும், இறுதிச்சடங்கு ஊர்வலம் அவரது மகனும் வாரிசான இளவரசர் 'சார்லஸ்' தலைமையில் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணி உடல் வைக்கப்பட்டு இருக்கும் சவப்பெட்டி பாராளுமன்ற இல்லத்தில் 3 நாட்கள் வைக்கப்படும் என்றும், இதில் லட்சக்கணக்கான மக்கள் லண்டனுக்கு வருகை தருவார்கள் என்றும், ராணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க லண்டனுக்கு கணிக்க முடியாத கூட்டம் மற்றும் பயண குழப்பங்களை நிர்வகிக்க ஒரு பாதுகாப்பு நடவடிக்கையை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அந்த திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து ராணி இறந்த பிறகு நடக்கும் இறுதிச்சடங்கு திட்ட விவரங்கள் குறித்த ஆவணங்கள் தற்போது கசிந்துள்ளது. இதற்கு யார் காரணம் என்ற பல கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே இங்கிலாந்து ராணி உயிரிழந்தால் அதனை எவ்வாறு தவறின்றி ஒளிபரப்புவது என்று அவ்வப்போது பிபிசி செய்தி நிறுவனம் ஒத்திகை மேற்கொண்டது.
இவ்வாறு ஒருமுறை ஒத்திகை மேற்கொள்ளும் போது, அந்த செய்தி நிறுவனத்தில் பணியாற்றிய ஒருவர் தவறுதலாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பிறகு, பிபிசி நிறுவனம் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.
