"ஆப்கானிஸ்தான் குழப்பங்களுக்கு ட்ரம்ப் தான் முக்கிய காரணம்" - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றச்சாட்டு
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால், அமெரிக்க படைகள் முற்றிலும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி விட்டன.
இந்நிலையில், தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள எடுத்த முடிவு சரியானதே என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதிபட தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய விவகாரத்தில் அதிபர் பைடன் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
இந்நிலையில், வெள்ளை மாளிகையிலிருந்து அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது -
ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் முடிவு மிகவும் சரியானது. இதை மனதார நான் நம்புகிறேன். இது அறிவுபூர்வமான முடிவு. ட்ரம்ப் அதிபராக இருந்த போது தலிபான்களுடன் போட்ட தவறான ஒப்பந்தமே இந்த குழப்பத்திற்கு காரணமாகிவிட்டன.
ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் தலிபான்களை விடுவிக்க ட்ரம்ப் ஒப்புக் கொண்டார். இதன் விளைவாகவே அவர்கள் வேகமாக எழுச்சி பெற முடிந்தது.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நடத்தி வந்த போர் முடிவுக்கு வந்துவிட்டாலும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
