இந்தியாவுடன் உறவு முன்பை போலவே தொடர விரும்புகிறோம் - தலிபான் தலைவர்
காபூல் - இந்தியாவுடனான கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் மற்றும் வர்த்தக உறவு முன்பை போலவே தொடர நாங்கள் விரும்புகிறோம் என்று தலிபான் அமைப்பின் துணைத் தலைவரான ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டேனக்சாய் தெரிவித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் தலிபானின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையே நல்ல நட்புறவு இருந்து வந்தது. இதனால், ஆப்கானிஸ்தான் வளர்ச்சிக்காக பல திட்டங்களை இந்தியா மேற்கொண்டது. தற்போது பாகிஸ்தானின் ஆதரவு பெற்றிருக்கும் தலிபான்களின் கட்டுக்குள் ஆப்கானிஸ்தான் வந்திருப்பதால் இரு நாட்டின் உறவு எப்படி இருக்கும் என்ற அச்சம் எழுந்திருக்கிறது.தலிபான் பயங்கரவாதிகளுடன் இணைந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்காசிய நாடான கத்தாரில் இருக்கும் தலிபான் அமைப்பின் துணைத் தலைவர் ஸ்டேனக்சாய் கூறியுள்ளதாவது -
ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை இந்தியா ஒரு மிகவும் முக்கியமான நாடு. கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் மற்றும் வர்த்தக உறவுகளை அந்த நாட்டுடன் முன்பை போலவே தொடர நாங்கள் விரும்புகிறோம்.
பாகிஸ்தான் வழியாக அல்லது நேரடி விமானம் வாயிலாக வர்த்தக உறவை மேற்கொள்ளலாம். புதிய அரசு அமைந்ததும், இந்தியாவுடனான உறவைத் தொடர்வது குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
