நைஜீரியா பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் : 3 மாதங்களுக்கு பிறகு 100 பேர் விடுவிப்பு!
நைஜீரியாவில் கடந்த மே மாதம் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை கடத்தல் கும்பல் தற்போது 100 பேரை விடுதலை செய்துள்ளது.
நைஜீரியா நாட்டின் நைஜர் நகரில் தெகினா என்ற பகுதியில், சாலிகு டாங்கோ இஸ்லாமியா என்ற பள்ளி ஒன்று நடைபெற்று வந்தது. இப்பள்ளியில், இஸ்லாமிய கல்வி அளிக்கப்பட்டு வந்தது.
இந்த பள்ளி கூடத்தில், கடந்த மே மாதம் இறுதியில் திடீரென மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் கைகளில் ஆயுதமேந்தி வந்தனர். அப்போது, அவர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
இந்த அதிரடி துப்பாக்கிச் சூடு தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதனால், மாணவர்கள் மிகவும் பயந்து போனார்கள். அதன் பின்னர், அந்த மர்ம நபர்கள், அங்கிருந்த 136 மாணவர்களை கடத்திச் சென்றனர். கடத்தப்பட்ட மாணவர்களை மீட்க நைஜீரிய பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கிடையில், கடந்த ஜூன் மாதம் கடத்தல்காரர்களின் பிடியில் இருந்த 6 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், 15 மாணவர்கள் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பி வந்தனர். இந்நிலையில், 3 மாதங்களுக்கு மேலாக தங்கள் பிடியில் இருந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்களை கடத்தல்காரர்கள் நேற்று விடுதலை செய்திருக்கிறார்கள்.
எத்தனை பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்ற முழு விவரம் தற்போது வரை வெளிவரவில்லை. ஆனால், கடத்தல்காரர்களின் பிடியில் தற்போது எந்த மாணவர்களும் கிடையாது என்று இஸ்லாமிய பள்ளி தலைவர் அபுபக்கர் அல்ஹசன் தகவல் அளித்துள்ளார்.