பாகிஸ்தான் எங்கள் 2 வது வீடு; இந்தியாவுடன் நல்லுறவு கொள்ள விரும்புகிறோம் - தலிபான் செய்தித்தொடர்பாளர்
பாகிஸ்தான் - இந்தியா இடையேயான நீண்டகால பிரச்சினைகளை தீர்க்க இருநாடுகளும் முன்வர வேண்டும் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
தற்போது ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து, ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றி அமைக்கும் நடவடிக்கைகளை தாலிபான்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளன.
இந்நிலையில், அண்டை நாடுகளுடன் தலிபான்களின் உறவு எப்படி இருக்கும் என்பது குறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது -
'பாகிஸ்தான் எங்களுக்கு 2 வது வீடு. எல்லைப்புற நாடு என்பதாலும் மதத்தின் அடிப்படையிலும் எங்கள் இரு நாட்டு மக்களும் ஒன்றாகக் கலந்தவர்கள். பாகிஸ்தானுடன் வணிகம் மற்றும் அரசியல் தொடர்புகளை மேலும் வலுப்படுத்த எதிர்நோக்கி உள்ளோம்.
பாகிஸ்தான் - இந்தியா இடையேயான நீண்டகால பிரச்சினைகளை தீர்க்க இரு நாடுகளும் முன்வர வேண்டும். இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை ஏற்படுத்த நாங்கள் விரும்புகிறோம்.
ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் கைப்பற்றியதில் பாகிஸ்தானுக்கு எந்தப் பங்கும் கிடையாது. தலிபான்கள் விவகாரத்தில் அண்டை நாடு எப்போதும் தலையிட்டது கிடையாது. இஸ்லாமை அடிப்படையாகக் கொண்ட, அனைத்து ஆப்கானியர்களையும் உள்ளடக்கிய வலிமையான அரசை நாங்கள் அமைக்க விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.