அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனாவால் சிறுவர்களின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு - மருத்துவர்கள் எச்சரிக்கை
அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா வைரஸ், குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்நாட்டில், முன்பு இல்லாத அளவிற்கு கொரோனா தொற்று பாதிப்புக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா தொற்று பாதிப்பால் சராசரியாக ஒரு நாள் ஒன்றுக்கு 303 குழந்தைகள் வீதம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஃபுளோரிடாவின் ஜாக்சன்வில்லில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் 15 சிறுவர்கள் கொரோனா பாதிப்புக்கு தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
அந்த சிறுவர்கள், மருத்துவமனையில் இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 71 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், சென்ற மாதம் 87 பேர் சிகிச்சை பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரியில் 49 சிறுவர்கள் மட்டுமே சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த 2 மாதங்களாக சிறுவர்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் பெரும்பாலான குழந்தைகள் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மற்ற வகை கொரோனாவை விட, டெல்டா வகை மிகவும் வீரியம் மிகுந்திருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பள்ளிகள் திறக்கப்பட்டதால், குழந்தைகளின் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
