"நீ ஒரு பெண், வேலைக்கெல்லாம் வர வேண்டாம்... வீட்டுக்கு போ என்ற தலிபான்கள்" - ஆப்கன் ஊடகவியலாளர்கள் கவலை
நீ ஒரு பெண் என்பதால் இனி வேலைகெல்லாம் வரக் கூடாது என்று செய்தி நிறுவன தொகுப்பாளரை தலிபான்கள் வீட்டுக்கு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
தலிபான்கள் ஆட்சியில் எப்போதுமே பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பர். ஆப்கானிஸ்தானில் பெண்கள் சுதந்திரமாக வெளியே செல்லும் சூழல் மீண்டும் கேள்விக்குறியாகி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தனியார் செய்தி நிறுவன தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக ஷப்னம் தவ்ரான் வேலை பார்த்து வந்தார்.
தற்போது ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கையில் வந்துள்ளதால், ஷப்னம் வழக்கம்போல தன்னுடைய பணியை செய்வதற்காக அலுவலகம் வந்தார்.
அவரை தடுத்து நிறுத்திய தலிபான்கள் "நீ ஒரு பெண் வீட்டுக்கு செல்" எனக் கூறியிருக்கிறார்கள். மேலும் "ஆட்சி மாறிவிட்டது இனி இதுதான் கட்டளை" எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.
இதனால் மனமுடைந்த ஷப்னம் வேறு எதுவும் செய்வதறியாமல் வீட்டுக்கு திரும்பினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் அரசு நடத்தும் செய்தி நிறுவனமான ஆர்டிஏ பாஷ்டோவில் வேலை செய்து வருகிறேன். தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றியுள்ள நிலையில், மறுநாள் காலையில் நான் என் வேலைக்குச் சென்றேன். ஆனால், என்னை அங்கு வேலைக்கு வர வேண்டாம் என்று சொல்லி போகச் சொன்னார்கள்.
நான் என்ன காரணம் என்று கேட்டேன். விதிகள் இப்போது மாறிவிட்டது, பெண்கள் இனி ஆர்டிஏவில் வேலை செய்ய வேண்டாம் என்று அவர்கள் கூறினர். பெண்கள் படிப்பதற்கும் வேலைக்கு செல்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர்கள் முன்பு அறிவித்தபோது, நான் உற்சாகமடைந்தேன். ஆனால், நான் என் அலுவலகத்தில் யதார்த்தத்தை அனுபவித்தேன், அங்கு பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறினார்கள்.
எனது அடையாள அட்டையை அவர்களிடம் காண்பித்தேன். ஆனாலும் அவர்கள் என்னை வீட்டிற்கு செல்லுமாறு கூறி அனுப்பினார்கள். என் அலுவலகத்தில் ஆண்கள் மட்டும் வேலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.
ஆனால் என்னை அனுமதிக்கவே இல்லை. என்னால் இனி இங்கு வேலை செய்ய முடியாது. தற்போது ஆப்கானிஸ்தானில் வாழ்வது கடினம். எனக்கு ஏதேனும் ஆதரவு கிடைத்தால், நான் ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பிவிடுவேன் என்று கவலையுடன் தெரிவித்தார்.
