ஹைதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 2000ஐ கடந்தது - மழையால் மீட்பு பணி தாமதம்!
ஹைதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000த்தை தாண்டி உள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று ஹைதியின் டிபுரோன் தீபகற்ப பகுதியில் பயங்கர சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தினால் ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதனால், அங்கு மீட்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
நேற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த பலரது சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,941 ஆக அதிகரித்திருக்கிறது.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில், பலரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளின் முன்பு காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே கிரேஸ் புயல் தாக்கத்தால் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் கனமழை தற்போது பெய்து வருவதால் அங்கு மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சுமார் 60 ஆயிரம் வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளதாகவும், 76,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தேவாலயம் உள்ளிட்டவையும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
