தாலிபான்களால் ஆப்கானிஸ்தானுக்கு ஆபத்து : மலாலா கவலை!
ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவிக் கொண்டிருக்கும் பிரச்சினைகளைக் கண்டால் கல்மனம் படைத்தவர்களும் உடைந்து அழுதுவிடுவார்கள். அப்படித் தான் அங்கு காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தலிபான்களின் கோரப்பிடிக்குள் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆப்கானிஸ்தான் சிக்கியுள்ளது.
தலிபான்களால் ஆப்கானிஸ்தான் என்னவாகப் போகிறதோ என உலக நாடுகள் அனைத்தும் ஆழ்ந்த கவலையில் உள்ளன.
இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த செயற்பாட்டாளரும் நோபல் பரிசு பெற்றவருமான மலாலா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது கவலையளிக்கிறது.
இதனை அதிர்ச்சியுடன் கவனிக்கிறேன். அங்குள்ள பெண்கள், சிறுபான்மையினர், மனித உரிமை செயற்பாட்டாளர்களை நினைத்து கவலை கொள்கிறேன். ஆப்கனில் உனடியாக போர் நிறுத்தம் ஏற்பட உலகத் தலைவர்கள் வழிவகை செய்ய வேண்டும்.
அங்கு மனிதாபிமான ரீதியிலான உதவிகளை உலக நாடுகள் செய்ய வேண்டும். அகதிகளையும், பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா, பெண்களின் கல்விக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார்.
கடந்த 2012ம் ஆண்டு 15 வயதுச் சிறுமியாக இருந்த இவரை தாலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது, இவர் கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் மலாலா உயிர் தப்பினார்.
உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போதிலும் தொடர்ந்து பெண்கள், குழந்தைகளின் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுத்து வருகிறார். மலாலாவுக்கு 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
