"ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு இந்தியா முன்வந்துள்ளது.... ” - தலிபான்கள் தகவல்
மனிதாபிமான ரீதியில் ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக இந்தியா முன்வந்திருப்பதாக தலிபான்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றி தலிபான்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்துள்ளனர். இந்நிலையில் முதல்முறையாக அவர்களுடன் இந்திய குழு ஒன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் வெளியுறவுத்துறை இணைச் செயலாளர் ஜெ.பி.சிங்கும், தலிபான்கள் தரப்பில் ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசின் துணை பிரதமர் அப்துல் சலாம் ஹனாஃபியும் பேசிக்கொண்டனர்.
இதனையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் துணை பிரதமர் ஹனாஃபி, போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என இந்தியா தெரிவித்துள்ளதாக கூறினார். எனினும் இதுகுறித்து இந்திய தரப்பிலிருந்து எந்த ஒரு விளக்கமும் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.