சாலமன் தீவு நாடாளுமன்றத்தை தீ வைத்து கொளுத்திய பொதுமக்கள்: என்ன காரணம்?
சாலமன் தீவு பிரதமர் சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தியதால், பொதுமக்கள் நாடாளுமன்றத்திற்கு தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தென் பசுபிக் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான தீவுகளை கொண்ட நாடு சாலமன். இந்நாட்டில் கடந்த 2019ம் ஆண்டு முதல் மனசே சோகவரே என்பவர் பிரதமராக இருந்து வருகிறார். இந்நிலையில், இவர் அண்மையில் தைவான் உடனான தூதரக உறவை துண்டித்து விட்டு, சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தி இருக்கிறார்.
இந்தச் செயலுக்கு அந்நாட்டு மக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அரசின் இந்த முடிவை ஏற்க மறுத்த, அந்நாட்டின் பல்வேறு மாகாண அரசுகள் பிரதமரை பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்து வருகிறார்கள்.
அந்நாட்டில் இது தொடர்பாக போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில், தலைநகர் ஹோனியாராவில் உள்ள நாடாளுமன்றம் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர்.
மேலும், அங்கு கூடிய மக்கள் போராட்டம் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் அவர்களை விரட்டி அடிக்க முயற்சி செய்தனர். இதனால், போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இந்த மோதல் தற்போது வன்முறை கலவரமாக மாறி இருக்கிறது. இதனையடுத்து, ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்கும், அதன் அருகில் உள்ள ஒரு காவல் நிலையத்துக்கும் தீ வைத்து கொளுத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.