இலங்கை தமிழரை கொன்ற குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் - இம்ரான் கான் வாக்குறுதி
பாகிஸ்தானில் கைத்தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த இலங்கைத் தொழிலாளரான பிரியந்த குமார என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்படுவதற்குக் காரணமான அனைத்துக் குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்டத்தை நிலைநாட்டுவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உறுதி அளித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட பாகிஸ்தான் பிரதமர், மேற்குறிப்பிட்ட விஷயத்தை தெரிவித்தாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருக்கிறது.
இது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவல் வருமாறு -
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் நம்பிக்கை என்பன ஒருபோதும் பாதிப்படைய இடமளிக்கப்பட மாட்டாது என்றும் பாகிஸ்தான் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த செயலில் தொடர்புடைய அனைத்து வீடியோக் காட்சிகள் மற்றும் தகவல்கள், தற்போது பாக்கிஸ்தான் பாதுகாப்புப் பிரிவினரால் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதுவரை 113 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மற்றவர்களை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீண்டகாலமாகப் பாகிஸ்தானில் தொழில்புரிந்த இலங்கையரான பிரியந்த குமார, ஒரு முகாமையாளராக உயர் தொழில் திறமையைக் காட்டியவர். குற்றவாளிகளுக்கு கடவுளின் மன்னிப்பு இல்லை.
சட்டத்திலும் அவர்களுக்கு மன்னிப்பு கிடைக்காது. நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதுடன், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்.
இவ்வாறு பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.