தடுப்பூசி போடாதவர்களை கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டிய பிரான்ஸ் அதிபர் - வெடிக்கும் சர்ச்சை
தடுப்பூசி போடாதவர்களை அல்லது போட மறுப்பவர்களை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மிகவும் தரக்குறைவான முறையில் அவமதித்துப் பேசியது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் ஆடத் தொடங்கி இருக்கிறது. அதுவும் பிரான்சில் தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே அங்கு கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அதிபர் மேக்ரான் தலைமையிலான அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் தடுப்பூசி போடாதவர்களை மிகவும் தரக்குறைவாகப் பேசியது ‘ஒரு நாட்டின் அதிபரே இப்படிப் பேசலாமா?’ என்று அங்கு மக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
“தடுப்பூசி செலுத்தாதவர்களை சிறையில் அடைக்கப்போவதில்லை. அவர்களைக் கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தப் போவதும் இல்லை.
வரும் ஜனவரி 15-ந் தேதி முதல் தடுப்பூசி செலுத்தாதவர்கள் உணவகங்கள் செல்ல முடியாது, திரையரங்குக்குள் நுழைய முடியாது. தடுப்பூசி போடாதவர்களை இழிவு படுத்தப்போகிறேன்.
நான் அவர்களை தொந்தரவு செய்ய விரும்புகிறேன். கோப்படுத்த விரும்புகிறேன். இதுதான் இனி இந்த அரசின் கொள்கை. நாங்கள் அதை இறுதி வரை செய்வோம்” என்று கூறினார்.
இவ்வாறு அவர் பேசியது அங்கு கடும் சர்ச்சைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதிபர் பயன்படுத்திய பிரெஞ்ச் வினைச்சொல்லான “emmerder” என்பது மிக மோசமான வசைச்சொல் என்று கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் அதிபர் மேக்ரானை கடுமையாக எச்சரித்து வருகிறார்கள். ஒரு அதிபர் தனக்கு வாக்களித்த மக்களைப் பார்த்து இப்படியா பேசுவது என்று கண்டினம் தெரிவித்து வருகின்றனர்.