உலகப் புகைப்பட தினம் - புகைப்பட கலைஞர்களுக்கான ஓர் அங்கீகாரம்
ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரு புகைப்படம் உணர்த்திவிடும். எளிதாக மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலும் புகைப்படத்துக்கு உண்டு.
அவ்வளவு சாதனைகளை நிகழ்த்தும் புகைப்படக்காரர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகவே உலகப் புகைப்பட தினம் ஆகஸ்ட் 19-ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.
நம் வாழ்வில் அனைத்தையும் நியாபகம் வைத்துகொள்ள முடியாது. அதனால் தான் நாம் புகைப்படங்களை தேடி ஓடுகிறோம். நமக்கு பிடித்த தருணங்களை எந்த ஆண்டுகளும் நாம் நினைவு கூறும் விதமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு சேகரிக்கிறோம். அது நமக்கு ஒரு காலம் நடந்த நிகழ்வை நினைவுப்படுத்தும் போது சொர்க்கமாக திகழும்.
20-ம் நூற்றாண்டில் எடுத்த சில புகைப்படங்கள் உலக வரலாற்றையே மாற்றியது. 1989-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி, சீன வீரர்களின் பீரங்கிகளை எதிர்த்து நின்ற 'டேங்க் மேன்' புகைப்படம், வியட்நாம் போரை நிறுத்த காரணமாக இருந்த சிறுமியின் புகைப்படம், சூடானில் உணவுப்பஞ்சத்தை எடுத்துரைத்த பிஞ்சுக் குழந்தையின் புகைப்படம் என இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
19-ம் நூற்றாண்டில் லூயிசு டாகுவேரே என்பவர்தான் 'டாகுரியோடைப்' என்ற புகைப்படத்தின் செயல்முறையை வடிவமைத்தவர். இம்முயற்சிக்கு பிரான்ஸ் அகாடமி 1839-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி அனுமதி அளித்தது.
அதன் பின்னர், 1839-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு அரசு, ஆகஸ்ட் 19-ம் தேதி டாகுரியோடைப் செயல்பாட்டை உலக மக்கள் அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தலாம் என அறிவித்தது. அந்த ஆகஸ்ட் 19-ம் தினம்தான் உலகம் முழுவதும் புகைப்பட தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அப்போது லூயிசு டாகுவேரே பாரீஸில் உள்ள போல்வர்டு கோயிலைப் புகைப்படமாக எடுத்தார். அதுதான் தனிநபர் எடுத்த உலகின் முதல் புகைப்படம்.
சிறந்த புகைப்படங்களுக்கு ஆண்டுதோறும் பல அமைப்புகளால் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாகப் பத்திரிகை துறையில் சிறந்த புகைப்படங்களுக்கு 'வேர்ல்டு பிரஸ் போட்டோ' , 'டைம்' இதழ் மற்றும் புலிட்சர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சிறந்த புகைப்படத்துக்காகப் பல மணிநேரங்கள் பொறுமை காக்கும் புகைப்பட நண்பர்களுக்கு 182-வது புகைப்பட தின வாழ்த்துகள்