முதல்முறையாக பிரிட்டனில் மகாத்மா காந்திக்கு சிறப்பு நினைவு நாணயம் வெளியீடு
பிரிட்டனில் மகாத்மா காந்திக்காக சிறப்பு நினைவு நாணயம் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி மக்களாலும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், மகாத்மா காந்திக்காக சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட பிரிட்டன் அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த அறிவிப்பினை பிரிட்டன் நிதி அமைச்சரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனாக், தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியிட்டிருக்கிறார். அதற்கான மாதிரி நாணயத்தையும் அவர் அறிமுகம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், இந்து மதத்தை சேர்ந்த நான். தீபாவளியன்று இந்த நாணயத்தை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் மகாத்மா காந்தி. அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பிரிட்டனில் நாணயம் வெளியிடப்படுவது மிகவும் சிறப்பம்சம் என்றார்.
இந்த நாணயத்தில், இந்தியாவின் தேசிய மலரான தாமரையும், மகாத்மா காந்தியின் பொன்மொழி ஒன்றும் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்திய சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் போராடிய ஒருவருக்காக, பிரிட்டனில் நினைவு நாணயம் வெளியிடப்படுவது இதுவே முதன்முறை. 'தங்கம் மற்றும் வெள்ளியில் தயாரிக்கப்பட உள்ள இந்த நாணயம் நேற்று முதல் விற்பனைக்கு விடப்படப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
