தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் - கொத்துக் கொத்தாக தொற்று பிடியில் சிக்கும் மக்கள் - நிபுணர்கள் எச்சரிக்கை
டெல்டாவை விட மிக வேகமாக பரவும், மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உருமாறிய கொரோனா வைரஸ் கிருமியை தென் ஆப்ரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த நாட்டில், இந்த மாத தொடக்கத்தில் 106 என்ற அளவில் இருந்த கொரோனா தொற்று 1200த் தாண்டிச் சென்றுள்ளது.
கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை திடீரென்று 10 மடங்கு அதிகரித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன மாதிரியான தொற்று என்று ஆய்வு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆய்வில், புதிய உருமாறிய வைரஸ் கிருமியை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு B.1.1.529 என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று (வெள்ளிக்கிழமை) புதிய கிரேக்க மொழியிலான பெயரை உலக சுகாதார நிறுவனம் சூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தாக்கத்தை உலக சுகாதார நிறுவனம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், அதன் பரவல் அச்சம் அளிக்கும் வகையில் இருப்பதாகவும் அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய உருமாற்றம் அடைந்த வைரஸ் திறமையாக மிக வேகமாக பரவுவதுடன் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தாக்கி பாதுகாப்பை சீர்குலைக்குமாம். இதன் தீவிரத் தன்மை வரும் நாட்களில் வெளிப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு பீட்டா வைரஸ் தென் ஆப்ரிக்காவிலிருந்துதான் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தடுப்பூசி அதிக அளவில் போடப்பட்டதால் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இச்சூழலில் புதிய உருமாற்றம் அடைந்த வைரஸ் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தென் ஆப்ரிக்காவிலிருந்து இந்த வைரஸ் இந்தியாவுக்கு பரவுவதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால், மீண்டும் மிகப்பெரிய அச்சுறுத்தலைச் சந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.