ஆப்கானிஸ்தானை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - மக்கள் அலறி ஓட்டம் - 26 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலநடுக்கத்தால், சுமார் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தெற்கு ஆசிய நாடான, ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கில் உள்ள பக்திஸ் மாகாணத்தில், நேற்று பிற்பகல் 2 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில், 5.3 ஆக பதிவாகியது.
இதனையடுத்து, துர்க்மெனிஸ்தான் என்ற பகுதியில் மாலை 4 மணியளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.9 ஆக பாதிவாகியது.
அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த 2 நிலநடுக்கங்களால் குடியிருப்புக் கட்டடங்கள், வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு ஓடினார்கள்.
இந்த 2 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 4 குழந்தைகள், 5 பெண்கள் உட்பட 26 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.