பள்ளத்தில் விழுந்த கார் - 5 நாட்களாக உயிரைக் கையில் பிடித்து வாழ்ந்த மூதாட்டி - அதிசய சம்பவம்
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் 68 வயதான ஓய்வுபெற்ற செவிலியர் ஒருவர் கடும் குளிரில் சுமார் 5 நாள்கள் தலைகீழாக விழுந்த தனது காரில் உயிரைக் கையில் பிடித்து தப்பிய கதையை சொல்லியிருக்கிறார்.
கடந்த நவம்பர் 18ம் தேதி அன்று, 68 வயதான ஓய்வுபெற்ற செவிலியர் லினெல் மெக்ஃபார்லேண்ட் தன்னுடைய உறவினரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது, அவரது கார் பனிக்கட்டியில் சறுக்கி தலைகீழாக குப்புற கவிழ்ந்தது.
வாஷிங்டனில் நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்த 2 மரங்களுக்கு இடையிலான குழி ஒன்றில் அந்த கார் சிக்கிக்கொண்டு கவிழ்ந்துள்ளது.
லினெல் மெக்ஃபார்லேண்ட் தன்னுடைய செல்ஃபோன், ஷூக்கள், தண்ணீர் பாட்டில் ஆகியவை காரின் முன் பக்கம் வைத்துள்ளார். தன்னுடைய காயங்களின் காரணமாக அவை அவருக்கு எட்டவில்லை.
லினெல் மெக்ஃபார்லேண்ட்டின் செல்ஃபோனுக்கு அவரது மகள் போன் செய்துள்ளார். அந்த அழைப்பை அவர் ஏற்காததால், தன்னுடைய தாயைக் காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அவருடைய மகள், பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் அவரைக் காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்தனர். வாஷிங்டனின் கிட்டிடாஸ் பகுதி போலீசார் லினெல் மெக்ஃபார்லேண்டினின் செல்ஃபோன் மூலமாக இவர் இருக்கும் பகுதியைக் கண்டுபிடித்தனர்.
போலீஸ் அதிகாரிகள் அந்தப் பகுதிக்கு வந்த போது, காரை மரங்கள் மறைத்திருந்ததால் அவர்களால் லினெலின் காரை அவர்களால் கவனிக்க முடியவில்லை. தன் தாயின் செல்ஃபோன் இருந்த இடம் தெரியவந்ததும், தன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட அமேண்டா நெடுஞ்சாலையின் பகுதிகளில் வாழும் நண்பர்களிடம் தன் தாயைத் தேடித் தருமாறு கேட்டார்.
எலும்புகள் முறிந்து மிகுந்த காயமடைந்த மெக்ஃபார்லேண்ட், காருக்குள் இருந்த சீட் பெல்டை அறுக்க முயற்சி செய்தார். அப்போது, அவருடைய காலின் எலும்பு வெளியே தெரிந்தது.
இது குறித்து மெக்ஃபார்லேண்ட் கூறுகையில் -
நாட்கள் செல்ல செல்ல, என்னுடைய பெற்றோர் என்னை அணைக்கும் உணர்வைப் பெற்றேன். `என் தந்தை சுமார் 6 மாதங்களுக்கு முன் இறந்தார். அவரது கைகள் என்னைச் சுற்றி அணைத்துக் கொண்டது போல உணர்ந்தேன். அப்போது கடவுளிடம், `நான் என்றேனும் மரணம் அடைவேன் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் கண்டுபிடிக்க முடியாத இந்த இருட்டு இடத்தில் மரணமடைய விரும்பவில்லை என வேண்டினேன். உணவு எதுவும் இல்லாமல் அங்கு பெய்த மழை காரணமாக தேங்கிய மழைநீரை நக்கிக் குடித்து உயிர் வாழ்ந்தேன் என்றார்.
இறுதியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்திருக்கிறார். சமீபத்தில் தன் மகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய லினெல், `என்னைக் கண்டுபிடித்தது ஒரு பேரதிசயமான நிகழ்வு. நான் உயிருடன் இருந்தது என் பிடிவாதத்தைக் குறிக்கவில்லை. என் உறுதியைக் குறுக்கிறது என்று நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.