‘எல்லோரும் குறைவாக சாப்பிடுங்கள்...’ வடகொரியா மக்களுக்கு உத்தரவிட்ட அதிபர்
வடகொரியாவில் கடும் உணவுத் தட்டுப்பாடு நிலவி வருவதால் 2025ம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக சாப்பிட வேண்டும் என்று அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டிருக்கிறார்.
கொரோனா அச்சுறுத்தலால் வட கொரியா தனது நாட்டுடனான வெளிநாட்டு எல்லைகளுக்கு ‛சீல்' வைத்திருக்கிறது. குறிப்பாக, உணவுப் பொருட்கள், எரிபொருள் என மிகவும் அத்தியாவசியத் தேவைகளுக்காக சார்ந்திருந்த சீன எல்லையை மூடி இருக்கிறது.
இதனால், அங்கு ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலை 45 டாலர், 32 யூரோவாக உள்ளது. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3,300 ஆகும். வட கொரிய மக்கள் மிகக் கடுமையான உணவுப் பஞ்சத்தில் தத்தளித்து வருகின்றனர்.
இந்நிலையில் 2025ம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக சாப்பிடும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று அதிபரின் உத்தரவுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
வட கொரியாவின் சினுயிஜு நகரத்தில் வசிப்பவர்கள் கூறுகையில், 2025 வரை அரசு குறைவாக உணவு உண்ணச் சொல்கிறது. இப்போதே உணவுக் கையிருப்பு நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. அன்றாடம் பற்றாக்குறையால் கடுமையாக தவித்து வருகிறோம். எங்களுக்கு உணவு பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை என்றார்.
இது குறித்து அரசுத் தரப்பில் அறிக்கையில், வட கொரியா கொரோனாவைக் கட்டுப்படுத்தவே எல்லைகளை மூடியுள்ளது. அதன் பலனை வட கொரியா அடைந்திருக்கிறார்கள். அதேபோல் உணவுப் பஞ்சத்தையும் சமாளித்துக் கடந்து வரும் என்று குறிப்பிட்டுள்ளது.
ஐ.நா.,வின் உணவு மற்றும் விவசாயக் கழகம் வெளியிட்டுள்ள குறிப்பில், "வடகொரியா தனது உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யாவிட்டால் ஆகஸ்ட் முதல் அக்டோபருக்குள் நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும். இந்த ஆண்டு மட்டும் 8,60,000 டன் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்று அந்த அமைப்பு கணித்திருக்கிறது.
