சீனாவில் புதிதாக கிளம்பிய ‘குரங்கு பி’ வைரஸ் - கால்நடை மருத்துவர் பலி! மக்கள் அதிர்ச்சி
சீனாவில் ‘குரங்கு பி’வைரஸ் தாக்கி ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் தற்போது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில், கால்நடை மருத்துவர் ஒருவர் இரண்டு குரங்குகளுக்கு உடற்கூறாய்வு செய்துள்ளார். ஆனால், சில மாதங்களிலேயே அவருக்கு குமட்டல், வாந்தி, காய்ச்சல், நரம்பு பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து, அவர் மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மருத்துவர் கடந்த மே 27ல் மரணமடைந்தார்.
இதனையடுத்து, இவரது எச்சில், ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது, அவருக்கு ‘குரங்கு பி’ வைரஸ் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ‘குரங்கு பி’ வைரஸ் தாக்கி ஒருவர் முதல் முறையாக பலியானது சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த வைரஸ் மகாக்ஸ் வகை குரங்குகளில் 1932ல் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸ் நேரடி கழிவுகள், சுரப்பிகள் மூலம் பரவக்கூடியவை. ‘குரங்கு பி’ வைரஸால் இறப்பு சதவீதம் அதிகமாகும்.
குரங்கு, மிருகங்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள், ஆய்வு மைய பணியாளர்கள் கூடுதல் பாதுகாப்புடன் இருக்கும்படி சீனாவின் நோய் கட்டுப்பாடு தடுப்பு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.
மனிதர்களை ‘குரங்கு பி’ வைரஸ் தாக்கும் போது 1-3 வாரங்களில் அறிகுறிகள் தென்படும். பின் மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி மரணத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
