யூரோ கால்பந்து போட்டியில் ஜேர்மன் சிறுமியை கேலி, கிண்டல் செய்த பிரித்தானியர் : கதறி அழுத சம்பவம்!
ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான யூரோ கால்பந்து தொடர், வெகு விமர்சியாக ஐரோப்பாவில் இருக்கும் பல நாடுகளில் நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து - ஜேர்மனி அணிக்கு எதிரான நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து 2-0 என்று வெற்றி பெற்றது. இதனால், ஜேர்மனி இந்த தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது. இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், இந்தப் போட்டியை காண வந்த ஜேர்மனி சிறுமி மைதானத்தில் கதறி அழுதார்.
அப்போது அந்த வீடியோ அங்கிருக்கும் பெரிய திரையில் காண்பிக்கப்பட்டது. அச்சிறுமியின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் வைரலானது. இ
ந்தப் புகைப்படத்தை பார்த்த பிரித்தானியா ரசிகர்கள் பலர் அச்சிறுமியை கேலியும், கிண்டலும் செய்து வந்தனர். இச்செயலை, முன்னாள் கால்பந்து வீரர்களான Stan Collymore மற்றும் Gary Lineker கண்டித்தனர்.
இந்நிலையில், பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியை சேர்ந்த Joel Hughes என்பவர், சிறுமிக்கு ஆதரவாக, JustGiving page for the youngster என்ற பக்கத்தை உருவாக்கி சிறுமிக்காக நிதி திரட்ட முடிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது -
சிறுமியை பிரித்தானியர்கள் பலர் கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில், அச்சிறுமி மனதில் இங்கிருக்கும் அனைவரும் இது போன்று கொடூரமானவர்கள் கிடையாது அவர்கள் மத்தியில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதை புரிய வைப்பதற்காக இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளேன்.
நான் 500 பவுண்ட்டை வைத்துள்ளேன். இப்போது அது 10 ஆயிரம் பவுண்ட்டை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது.
அச்சிறுமியை நான் தேடி வருகிறேன். ஜேர்மனியில் இருக்கும் சில ஊடகங்களிடமும் நான் பேசி வருகிறேன். ஆனால், அச்சிறுமியைப் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
அச்சிறுமிக்காக ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. நான் இதுவரை சிறுமியின் பெற்றோரை தொடர்பு கொள்ளவில்லை. இருப்பினும் ஜேர்மன் ஊடகவியலாளர்கள் சிலரிடம் தொடர்பில் இருக்கிறேன்.
நான் அந்த குடும்பத்தை தொடர்பு கொண்டால், இந்த நிதியை கொடுத்துவிடுவேன். அப்படி தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால், இந்த பணம் தேவைப்படும் தொண்டு நிறுவனத்திற்கு கொடுத்துவிடுவேன்
அச்சிறுமி சமூகவலைத்தளத்தில் கேலி, கிண்டலுக்குள்ளானதை என்னால் பார்க்க முடியவில்லை. இதனால் அவரது முகத்தில் புன்னகையை பார்க்க விரும்பினேன்.
அதுமட்டுமின்றி பிரித்தானியாவில் அனைவரும் கொடூரமானவர்கள் அல்ல, என்னைப் போல் அக்கறை கொள்ளும் பலரும் உள்ளதை நிரூபிக்கவும் இது உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.