இந்த இரண்டு தடுப்பூசிகளை கலந்தால் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகுமாம் - ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு!
ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஜெனேகாவின் கோவிட் -19 தடுப்பூசிகளை கலந்தால், ஒரு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. கொரோனா தடுப்பூசி விநியோகிப்பத்தை விரிவுபடுத்துவதற்கான பல்வேறு வழிகளை மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
பல நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதால், முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசி டோஸ்கள் போடும் நேரம் தாமதமாகிறது. இந்த நிலைமையை எப்படி சமாளிப்பது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், ஃபைசர் (pfizer) மற்றும் அஸ்ட்ராஜெனேகாவின் (AstraZeneca) கோவிட் -19 தடுப்பூசிகளை கலப்பதன் மூலம் ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாகிறது என கண்டுபிடித்துள்ளது.
இந்த ஆய்வில், 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 830 தன்னார்வலர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஆய்வில், முதல் டோஸாக அஸ்ட்ராஜெனேகா மருந்தையும், இடைவெளிக்கு பிறகு இரண்டாவது டோஸாக ஃபைசர் தடுப்பூசியும் செலுத்தினால், அல்லது இதற்கு நேர்மாறாக முதலில் ஃபைசரையும் 4 வாரங்களுக்குப் பிறகு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியும் கொடுக்கப்படும்போது, உடலில் கோவிட்-19க்கு எதிராக அதிக அளவு ஆன்டிபாடிகள் சுரப்பது தெரியவந்திருக்கிறது.
ஃபைசரை தொடர்ந்து அஸ்ட்ரா தடுப்பூசியை செலுத்துவதை விட, அஸ்ட்ராவைத் தொடர்ந்து ஃபைசர் தடுப்பூசியை செலுத்துவது அதிக அளவு நோய் எதிர்ப்பு ஆன்டிபாடிகள் மற்றும் டி- செல்களை உருவாக்கியது தெரியவந்துள்ளது.
அடுத்ததாக, மாடர்னா (Moderna) மற்றும் நோவாவாக்ஸ் (Novavax) தடுப்பு மருந்துகளை இணைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.