உலக மக்களின் நெஞ்சை பதற வைத்த ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கிற்கு நீதி கிடைத்தது!
அமெரிக்காவில் கறுப்பினத்தவர் மீது வெள்ளையின போலீசார்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது வழக்கமானதுதான். ஆனால், நிறவெறியின் காரணமாக அவர்கள் மீது பொய்க்குற்றம் சுமத்துவது, அவர்களை அடித்து துன்புறுத்துவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் அந்நாட்டு போலீசார் ஈடுபட்டு வந்தார்கள்.
இதனையடுத்து, ஒருவரின் இறப்பு சம்பவம் அமெரிக்காவை மாற்றியமைத்தது. அவரின் பெயர் ஜார்ஜ் பிளாய்ட். மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கள்ளநோட்டு புகார் தொடர்பாக கடந்த ஆண்டு மே 25ம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் (46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீசார் மடக்கிப் பிடித்தார்கள்.ஆனால், அவர் காரில் ஏற மறுத்தார். அப்போது ஒரு போலீஸ்காரர் பிளாய்டை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்திக் கொண்டிருந்தார்.
அப்போது, ஜார்ஜுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர் எவ்வளவோ கெஞ்சியும் போலீசார் அவரது காலை அவர் கழுத்திலிருந்து எடுக்கவில்லை. இதனால், மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்து போனார்.
இந்தச் சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி உலக மக்களிடையே அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியது. நிறவெறியினால் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதால் அவரது இறப்புக்கு நீதி வேண்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் இறங்கினார்கள்.
இதனையடுத்து, பிளாய்டின் உறவினர்கள் நீதி வேண்டி நீதிமன்றத்தை வழக்கு தொடர்ந்தனர். அதற்குப் பிறகு பிளாய்டை கொலை செய்த டெரிக் சாவின் என்ற போலீசார் உட்பட 4 பேரை பணி நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்கள்.
இந்த வழக்கில் தற்போது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. டெரிக் சாவின் குற்றவாளி என்று உறுதியானதால் 22 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சமீபத்தில் இந்த கொடூர சம்பவத்தை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டிய டார்னெல்லா ஃபிரேசியர் என்ற பெண்ணுக்கு மிக உயர்ந்த புலிட்சர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே வீடியோ தான் பிளாய்டுக்கும் நீதி வாங்கி கொடுத்துள்ளது.
