யானை தாக்கி பெண் பரிதாப மரணம் - வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஆந்திர மாநிலம் விஜய நகரம் மாவட்டத்தில் உள்ள பாத்த கொலிகொட்டா கிராமத்தில் காய்கறிகள் பறிக்கச் சென்ற பெண் ஒருவர் யானை தாக்கி பரிதாபமாக மரணமடைந்தார்.
பாத்த கொலிகொட்டா கிராமத்தைச் சேர்ந்த அப்பம்மா இன்று அதிகாலை தன்னுடைய வயலில் விளைந்திருக்கும் காய்கறிகளைப் பறிப்பதற்காக சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்தப் பகுதியில் உலவிக் கொண்டிருந்த யானை கூட்டத்தில் ஒரு யானை அப்பம்மாவை விரட்டி சென்றது. யானையிடம் இருந்து தப்புவதற்காக ஓடிய அப்பம்மாவை அந்த யானை கீழே தள்ளி மிதித்து கொன்றது.
[ZV5YPA]
இன்று காலை வயல் வேலைக்கு சென்றவர்கள் அப்பம்மா யானை மிதித்து இறந்து கிடப்பதைப் பார்த்து கிராம மக்களுக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து கிராமத்தினர் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் வயல்வெளியில் உலவும் யானை கூட்டத்தை விரட்டியடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு முன் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களில் யானை மிதித்து பலர் இறந்துவிட்டனர். இதுபற்றி தகவல் அளித்தாலும் வனத்துறையினர் விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோரை யானைகளிடம் இருந்து காப்பாற்றும் வகையில் இதுவரை உருப்படியான நடவடிக்கை ஒன்றையும் மேற்கொள்ளவில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.