‘பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டு, வீடு முழுக்க விஷ வாயு..போலீசாருக்கு எச்சரிக்கை கடிதம்’- டெல்லியை உலுக்கிய தற்கொலை சம்பவம்!
தலைநகர் டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் 207-வது வீட்டில் 50 வயது கொண்ட மஞ்சு என்ற பெண் அன்ஷிகா, அன்கு என்ற தன் இரு மகள்களுடன் வசித்து வந்தார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா தாக்குதலில் கணவர் உயிரிழந்ததில் இருந்தே மஞ்சு மற்றும் அவரது மகள்கள் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், மஞ்சுவின் வீடு நேற்று முன் தினம் மாலை நீண்டநேரமாக உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்துள்ளனர்.
அவர்கள் மஞ்சு வீட்டின் கதவை தட்டியும் யாரும் திறக்காததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து, குடியிருப்பு பகுதிக்கு சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வீட்டின் ஒரு அறையில் மஞ்சு மற்றும் அவரின் மகள்கள் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனை தொடர்ந்து 3 பேரின் உடலைகளையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் திறக்கப்பட்டு கியாஸ் வாயு வீடு முழுவதும் வீசியிருந்துள்ளது. வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்கள் முழுவதும் பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டிருந்தது.
மேலும், வீட்டில் இருந்த தற்கொலை கடிதத்தை கைப்பற்றிய போலீசார் கடிதத்தில் மஞ்சு எழுதி வைத்திருந்த திடுக்கிடும் தகவல்களை படித்து அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
“வீட்டிற்குள் நுழைபவர்கள் யாரும் தீக்குச்சியை பற்றவைக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் வீடு முழுவதும் தீயில் கருகி விடும். அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வாயு கார்பன் மோனாக்சைடு வீடு முழுவதும் பரவி உள்ளது. அது தீப்பற்றக்கூடும். தயவு செய்து வீட்டின் கதவு, ஜன்னல்கள், காற்றுப்போக்கியை திறந்துவிடுங்கள்.” என அந்த கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “தீக்குச்சி, மெழுகுவர்த்தி என எதையும் பற்றவைக்க வேண்டாம். பிளாஸ்டிக்கால் அமைக்கப்பட்டுள்ள திரையை கவனமாக நீக்குங்கள் ஏனென்றால் அறை முழுவதும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய வாயு உள்ளது. அதை சுவாசிக்காதீர்கள்'என எழுதப்பட்டுள்ளது.
இதை படித்து அதிர்ச்சியடைந்த போலீசார் கவனமாக செயல்பட்டு வீடு முழுவதும் பிளாஸ்டிக் கவரால் அடைக்கப்பட்டிருந்த கதவு, ஜன்னல்களை திறந்து வாயு வெளியேற செய்தனர்.
கதவு, ஜன்னலை பிளாஸ்டிக் கவரால் காற்று புகாத அளவுக்கு மூடிவிட்டு வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரை திறந்து வைத்துவிட்டு வீட்டிற்குள்ளேயே விறகு அடுப்பில் தீ வைத்து புகையை உண்டாகியுள்ளனர். அந்த புகை சமையல் கியாஸ் சிலிண்டர் வாயுவுடன் சேர்ந்து கார்பன் மோனாக்சைடு என்ற விஷவாயுவாக மாறியுள்ளது.
அந்த விஷவாயு வெளியே செல்லமுடியாமல் வீட்டிற்குள்ளேயே இருந்துள்ளது. அந்த விஷவாயுவை சுவாசித்த மஞ்சு மற்றும் அவரின் இரண்டு மகள்களும் மூச்சுதிணறி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.