திடீரென தீப்பற்றி எரிந்த வீடு - கருகிய நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண் உடல்
கேரளாவில் தீப்பற்றி எரிந்த வீட்டில் இருந்து இளம்பெண்ணின் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் வடக்கு பரவூர் பகுதியை சேர்ந்த சிவானந்தன் - ஜிஜி தம்பதியினருக்கு விஷ்மயா (25) மற்றும் ஜிது (22) ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
தாய்-தந்தை இருவரும் வீட்டில் இல்லாததால் நேற்று இரவு சகோதரிகளான விஷ்மயா மற்றும் ஜிது தனியாக உறங்கியுள்ளனர். இதனிடையே இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்து குறித்து அண்டை வீட்டினர் போலீசார், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்புத்துறைனர் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.அங்குள்ள ஒரு அறையில் விஷ்மயா உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அவரின் உடலை மீட்ட மீட்புக்குழுவினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் மிகவும் கருகிய நிலையில் இருந்ததால் உயிரிழந்தது விஷ்மயா என்பது டிஎன்ஏ பரிசோதனை மூலமே உறுதி செய்யப்பட்டது.\
அதேசமயம் இளையசகோதரியான ஜிது தீ விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். அவர் தற்போது தலைமறைவாக உள்ளார். வீடு தீப்பற்றிய உடன் வீட்டை விட்டு ஓடிய ஜிது எங்கு சென்றார் என்பது இதுவரை தெரியவில்லை.
இதனால் விஷ்மயாவை கொலை செய்து வீட்டிற்கு தீவைத்துவிட்டு ஜிது தப்பியோடியுள்ளாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.