நாய்க்கடிக்கு உரிய சிகிச்சை எடுக்காமல் அலட்சியம் - பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
நாய்க்கடிக்கு உரிய சிகிச்சை எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்த 50 வயது பெண்மணி ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள ஆலங்குளம் சக்தி நகரை சேர்ந்த பூ வியாபாரியான புஷ்பராஜின் 50 வயதான மனைவி மாரியம்மாளை, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக வீட்டின் அருகே இருந்த நாய் ஒன்று கடித்துள்ளது.
இதனையடுத்து நாய்க்கடிக்கு முறையான சிகிச்சை எடுக்காமல் இருந்து வந்த மாரியம்மாள் தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளாமல் இருந்துள்ளார், அவரது குடும்பத்தினரும் பெரிதாக கண்டுக்கொள்ளாமல் அலட்சியமாக விட்டுள்ளனர்.
இதனிடையே கடந்த சில தினங்களாக மாரியம்மாளின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை உடலின் பாகங்கள் செயலிழந்து போகவே மாரியம்மாளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் சிகிச்சை அளிப்பதற்கு முன்பாக மருத்துவமனையிலேயே மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து தாமதம் செய்யாமல் மாரியம்மாளின் உடலை அடக்கம் செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்ததோடு, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களையும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.