1 சவரன் நகை, AC வேணும்; உட்காரவே கூடாது - திருமணமாகி 4 நாட்களில் இளம்பெண் தற்கொலை
திருமணமாகி 4 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
வரதட்சணை கொடுமை
திருவள்ளூர், முஸ்லிம் நகர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரது மகள் லோகேஸ்வரி(22). இவருக்கும், அதே பொன்னேரியை சேர்ந்த பன்னீர் என்பவருக்கும் கடந்த 27ம் தேதி திருமணம் நடந்துள்ளது.
திருமணம் முடிந்ததும் மறுவீட்டிற்காக லோகேஸ்வரி கணவருடன், தன்னுடைய அம்மா வீட்டுக்கு வந்துள்ளார். தொடர்ந்து விருந்து முடிந்ததும், அனைவரும் தூங்கச் சென்றுள்ளனர். அப்போது பாத்ரூம் சென்ற லோகேஸ்வரி நீண்ட நேரமாகியும் வெளியே வராமல் இருந்துள்ளார்.
உடனே அவரது தந்தை கதவை தட்டி பார்த்தும் திறக்காததால், உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு அந்தப் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
பெண் தற்கொலை
பின் புகார் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அவரது தந்தை கூறுகையில், 'எனது மகளுக்கும் காட்டாவூரை சேர்ந்த பன்னீர் என்பவருக்கும் கடந்த 27ம் தேதி திருமணம் நடந்தது. 4 சவரன் நகை, பைக், ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பில் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி கொடுத்தோம்.
திருமணம் முடித்த நாளிலிருந்து வரதட்சணை கேட்டு எனது மகளை துன்புறுத்தியுள்ளனர். எனது மகளின் செல்போனை பறித்து வைத்துள்ளனர். மீதம் தரவேண்டிய ஒரு சவரன் நகை, ஏ.சி. வீட்டிற்கு தேவையான பொருட்களை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர்.
நேற்றிரவும் இதுகுறித்து எனது மகளிடம், பன்னீர் கேட்டு சண்டையிட்டார். இருவரையும் சமாதானம் செய்தோம். எனது மகளின் சாவுக்கு பன்னீர் மற்றும் அவரது குடுபத்தினர் தான் காரணம். காலையிலேயே எழுந்ததும் துணி துவைக்க வேண்டும், பாத்திரங்களை கழுவ வேண்டும், சோபாவில் உட்கார கூடாது என்றெல்லாம் ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் பெண்ணின் கணவர் பன்னீர் (37), மாமியார் பூங்கோதை (60) கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மாமனார் மற்றும் நாத்தனாரை போலீசார் தேடிவருகின்றனர்.