பூனைக்கு தாய்ப்பால் அளித்த பெண் - அலறிய பயணிகள்
விமானத்தில் பூனைக்கு பெண் ஒருவர் தாய்ப்பால் அளித்ததற்கு சக பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செல்லப்பிராணி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களில் சிலர் தாங்கள் வளர்த்து வரும் செல்லப்பிராணிகளை தங்கள் குழந்தைகளைப் போலவும், சிலர் அதற்கு மேலானதாகவும் பாவித்து வளர்ப்பார்கள். இதனாலேயே சில நேரங்களில் செல்லப்பிராணி வளர்ப்போருக்கும், பிறருக்கும் இடையே பிரச்னை ஏற்படுவதுண்டு.
அந்த வகையில் விமானத்தில் பயணித்த பெண் ஒருவர், தான் ஆசையாக வளர்த்து வரும் பூனைக்கு தாய்ப்பால் அளித்தது சக பயணிகள் மட்டுமல்லாது விமான நிறுவன பணியாளர்களுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற டெல்டா விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று நியூயார்க் மாகாணத்தின் சைராகியூஸ் நகரில் இருந்து ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவிற்கு பயணமாகியது.
இந்த விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது திடீரென தான் துணியில் மூடி வைத்திருந்த செல்லப்பிராணியான பூனைக்கு தாய்ப்பால் கொடுக்கத்தொடங்கியிருக்கிறார். அந்தப் பெண்ணின் செயலால் பூனை ஆக்ரோஷமாக கத்தியுள்ளது.
பூனையின் சத்தம் அதிகரித்ததால் அதிருப்தியடைந்த சக பயணிகள் தாய்பால் கொடுக்க வேண்டாம் என அப்பெண்ணிடம் கூறியிருக்கின்றனர். இருப்பினும் பயணிகளின் பேச்சை மதிக்காத அப்பெண் தனது செயலை தொடரவே பயணிகள் விமான சிப்பந்திகளிடம் புகார் அளித்தனர்.
விமான பணிப்பெண்கள் வந்து பால் கொடுக்க வேண்டாம் என தெரிவித்த போதிலும் அந்தப் பெண் மதிக்காமல் தனது வேலையை பார்த்துள்ளார். உடனடியாக விமானிகள் தரைக்கட்டுப்பாட்டு பிரிவினரிடம் புகாரளித்தனர்.
இதனைத் தொடர்ந்து விமானம் அட்லாண்டா விமான நிலையத்தை அடைந்தபின்னர் அந்த பெண்மணி தனியாக அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.