8 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் சடலம்: போலிசார் தீவிர விசாரணை
சேலத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் கண்டறியப்பட்ட நிலையில் சமையல்காரர் செல்லதுரை என்பவரிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலத்தின் அரிசிபாளையம் குணபாலா ராமசாமி தெரு பகுதியில் உள்ள வீட்டில் பெண்ணின் சடலம் 8 துண்டுகளாக வெட்டப்பட்டு தண்ணீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டது.
நேற்று காலை 8 மணியளவில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் பிற்பகலில் அருகில் இருந்த 2 இளைஞர்கள் மற்றும் சமையல்காரரிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

மாலை கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் தங்கமணி என்பதும் சேலம் மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
விசாரணையில் கடந்த சில ஆண்டுகளாக தங்கமணி சேலம் அஸ்தம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீட்டு வேலை செய்து வந்ததும், மாயமாகுவதற்கு முன்னதாக மருத்துவர் ஒருவரின் வீட்டில் வேலை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 28ம் தேதி முதல் மனைவியை காணவில்லை என தங்கமணியின் கணவர் ஜீவானந்தம் போலிசில் புகார் அளித்திருந்தார்.
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட சமையல்காரரின் தங்கை தங்கமணியின் தோழி என்பதும் தற்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது.
இதனைதொடர்ந்து குறித்த சமையல்காரரிடம் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.